போதைப்பொருளுடன் கைதான அதிபர் – டிசம்பர் 10 வரை விளக்கமறியல்!
அநுராதபுரம் பகுதியில் பெருமளவு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆம் திகதி, அநுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
எப்பாவல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்னால் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் 1 கிலோகிராம் 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும், போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு (Electronic scale) மற்றும் பொலிதீன் சீலர் (Polythene sealer) ஆகியவையும் அதிபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
விசாரணைகளைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





