அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியைப் பதவி விலக வலியுறுத்தி, இன்று இலங்கை முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுகாதாரம், போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், அமைப்புகள், இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் அண்மைக்காலத்தில் இல்லாத வகையில், மிகப் பெரியளவிலான தொழிற்சங்க- முழு அடைப்பு போராட்டமாக இன்றைய போராட்டம் அமைந்துள்ளது.
நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்தப் போராட்டத்தினால், பேருந்து, ரயில் சேவைகள் முடங்கியுள்ளன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும், சாதாரண பயணிகளுக்கான முனையங்களில் மட்டும், சேவைகள் இடம்பெறுகின்றன.
பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அனைத்து அரச திணைக்களங்கள், வங்கிகளின் பணியாளர்களும், இன்றைய போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர்.
இதனால், அரச, தனியார் துறை நிறுவனங்கள் அனைத்தும் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தொழிற்சங்கப் போராட்டத்துக்கு அரசாங்கமும், ஜனாதிபதியும், மதிப்பளித்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தொடர் முழு அடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்க கூட்டமைப்புகள் எச்சரித்துள்ளன.