லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ வல்லிபுர ஆழ்வார் தீர்த்தோற்சவம் கோலாகலம்
யாழ். வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவின் சமுத்திரத் தீர்த்தோற்சவம், லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழக் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான சமுத்திரத் தீர்த்தம், நேற்று திங்கட்கிழமை (அக்டோபர் 6) மாலை வடமராட்சி கற்கோவளம் கடற்பகுதியில் இடம்பெற்றது.
16-ஆம் நாள் உற்சவமாகிய தேர்த்திருவிழாவைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் இந்தத் தீர்த்தத் திருவிழா நடைபெற்றது. இச் சமுத்திரத் தீர்த்தோற்சவத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டு ஆழ்வாரை வழிபட்டுச் சென்றனர்.

இன்றைய நிகழ்வுகள்:
இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) காலை கேணித் தீர்த்தமும், மாலை 6.00 மணியளவில் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளதுடன், ஆலயப் பெருந்திருவிழா இனிதே நிறைவுபெறும்.





