பன்மொழிப் பயன்பாட்டை உயர்த்துவதற்காகவும் ,அமைதியை நிலை நிறுத்தவும், பன்முகப் பண்பாடுகளைப் போற்றுவதற்காகவும், உலகில் உள்ள அனைத்துத் தாய் மொழிகளைப் பாதுகாப்பதற்காகவும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது.
இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தான், மேற்கு மற்றும் கிழக்கு என்று இரண்டு துண்டுகளாக காணப்பட்டது . கிழக்கு பாகிஸ்தானே தற்போதைய வங்காள தேசம் ஆகும். வங்க மொழி பேசும் மக்கள் அதிகளவில் வாழும் கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக காணப்பட்டது. ஒரே மதத்திலான மக்கள் இரண்டு பக்கமும் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் இருக்கும் உருது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்பட்டதை அவ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து, வங்காள தேசத்தின் தேசிய மொழியாக வங்க மொழியே காணப்பட வேண்டும் என்பதற்காக, 1952-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட “வங்க மொழி இயக்கத்தை” அங்கீகரிப்பதற்காகவே பெப்ரவரி 21-ம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந் நாளில் தான் வங்க மொழி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்களும் அரசியல் ஆதரவாளர்களும், தங்கள் மொழிக்காகச் சட்டத்தை மீறி போராட்டத்தில் இறங்கினர். காவல் துறையின் நடவடிக்கையால்,நான்கு மாணவர்களும் கொல்லப்பட்டனர்.
போராட்டங்கள் நாடு முழுவதும் வேகமாக பரவியது. ஒரு சில ஆண்டுகள் கடந்தும் போராட்டங்கள் ஓயவில்லை. இறுதியில், 1956 ஆண்டு நாட்டின் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.
மொழிக்காகப் போராடிய இந்த இயக்கத்தையும் இறந்த மாணவர்களையும் நினைவில் கொண்டு, உலகில் வாழும் அனைத்து மக்களின் மொழி உரிமையினைப் பாதுகாக்கவே 1999-ம் ஆண்டின், 21 பெப்ரவரி மாதம் சர்வதேச தாய்மொழி நாள் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ அறிவிப்பு செய்தது.
உலகின் மூத்த மொழியாகவும் செம்மொழியாகவும் தமிழ் அன்னையின் பிள்ளைகளாய் ஒவ்வொரு உலகவாழ் தமிழனும் நிச்சயம் பெருமை கொள்ளலாம்.
- “ஜெட் தமிழ்” இன் உலக தாய் மொழி தின வாழ்த்துக்கள் *