பதுளை பஸ் விபத்தில் 15 பேரை காவு கொண்ட சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு சோகங்கள் புதைந்துள்ளன.
லுணுகலையைச் சேர்ந்த அந்தோனி நோவா 2021-03-20ல் கண் சிகிச்சைக்காக பதுளை அரசினர் மருத்துவமனைக்கு அவரது மனைவி பெனடிக்மெரோனாவுடன் புறப்பட்டடிருந்தார்.
இவர்கள் இருவரும் பஸ்நிறுத்துமிடத்திற்கு வந்தபோது குறிப்பிட்ட பஸ் சென்றுள்ளதாக அறிந்த நிலையில், அப்பஸ்ஸில் போனால் மட்டுமே கண் சிகிச்சைக்காக முதலில் போகலாம் என்ற நிலையில் சென்ற அவ் பஸ்சில் செல்வதற்காக, அவ்விடத்திலிருந்து ஆட்டோவொன்றில் ஏறிச் சென்றனர்.
குறிப்பிட்ட ஆட்டோவும் வேகமாகச் சென்று, ஏற்கனவே சென்றிருந்த அப்பஸ்சை தடுத்து நிறுத்தி இருவரும் பஸ்சில் ஏறியுள்ளனர்.
இந்நிலையில் குறிப்பிட்ட பஸ்சை துரத்திச்சென்று, ஏறிய தம்பதிகளின் பயணம் பசறை – 13 ம் மைல் கல்லுடன் முடிவடைந்தது.
வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் இவ்விருவருக்கு இரு பெண்பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையுமாக 03 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தந்தை அந்தோனி நோவா ’வேல்டிங்’ இரும்பு பொருத்துனர் வேலையிலேயே ஈடுபட்டு வருவபராவார்.
தற்போது மூன்று பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
இத் தம்பதிகள் பதுளை மருத்துவ மனைக்கு செல்லவிருந்த பஸ் கடந்து சென்றபோதிலும், மீண்டும் அப்பஸ்சைப்பிடித்து ஏறிச் சென்று, இவர்கள் காலனை அரவணைத்துக்கொண்ட இச்சோகச் சம்பவங்கள் போன்று வேறு பலசோகங்களும் இருந்து வருகின்றன.
விபத்தில் காயமுற்ற 33 பேர்களில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவ் ஐவரது நிலையும் மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக பதுளை அரசினர் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 20 ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்கியுள்ளதுடன், இவர்களில் மூன்று சிறுவர்களும் இரு சிறுமிகளும் அடங்குவர்.
காயமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வரும் பலர் தொடர்ந்தும் ஊனமுற்றவர்களாகவே இருக்கவேண்டிய அவலமும் இருந்துவருவதாக மருத்துவ மனைடாக்டர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.