வெளியிடப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, 72.7 சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதிப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 13,588 பேர் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ சித்தியினை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, கண்டி மஹாமாய மகளிர் கல்லூரியின் மாணவியான சமாதி அநுராதா ரணவக்க அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
அதேநேரம், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் மாணவியான அக்ஷயா ஆனந்தசயனன் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன், பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த பாடசாலை தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.
இதுதவிர, கொழும்பு ரோயல் கல்லூரியை சேர்ந்த மாணவரான ஹரித்த மின்சந்து அழஹக்கோன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று அதிகாலை வெளியிடப்பட்டன. குறித்த பரீட்சைக்கு 394,450 பாடசாலை பரீட்சார்த்திகளும், 78,103 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தமாக 472,553 பேர் தோற்றியிருந்தனர்.