மட்டக்களப்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (11) அதிகாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் பல நாள் மீன்பிடிக் கப்பலைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முற்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்தேக நபர்களில், 18 வயதுக்கு மேற்பட்ட 60 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 11 பேரும் கப்பலில் இருந்தனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் குழுவும் பல நாள் மீன்பிடிக் கப்பலும் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.