யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மருமகனால் அடித்துக் கொலை! சடலத்தைத் தூக்கி வீசிவிட்டுத் தப்பியோடிய தம்பதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பெண் விரிவுரையாளர் ஒருவரை, அவரது மகளின் கணவரான மருமகன் அடித்துக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (19) விரிவுரையாளரையும் அவரது மகளையும் மருமகன் கடத்திச் சென்றதாக விரிவுரையாளரின் மகன் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், குறித்த விரிவுரையாளர் மருமகனின் தாக்குதலில் உயிரிழந்தமை அம்பலமாகியுள்ளது.
பாண்டியன்தாழ்வுப் பகுதியிலுள்ள விரிவுரையாளரின் வீட்டில் கயிறு மூலம் வெளியேறிய ஆதாரங்களை மீட்ட பொலிஸார், சிசிடிவி மற்றும் கியூ.ஆர் (QR) குறியீட்டுத் தரவுகளை வைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.
பரந்தனில் பணம் எடுத்தமை மற்றும் திருகோணமலையில் எரிபொருள் நிரப்பியமை ஆகிய தடயங்களை வைத்து, நேற்று (20) திருகோணமலையில் வைத்து 21 வயதுடைய கணவனையும் 19 வயதுடைய மனைவியையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், விரிவுரையாளர் உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தை யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியில் வீசிவிட்டுத் தப்பியோடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தற்போது சடலம் வீசப்பட்ட இடத்தை அடையாளம் காண்பதற்கும், கொலையின் பின்னணியிலுள்ள உண்மையான காரணங்களைக் கண்டறியவும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





