ஈராக்கில் அமெரிக்கப் பெண் ஊடகவியலாளர் கடத்தல்! ஈரானிய ஆதரவு ‘கதாயிப் ஹிஸ்புல்லா’ குழு மீது சந்தேகம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகாமையில், செவ்வாய்க்கிழமை மாலை அமெரிக்கப் பெண் ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் கடத்தப்பட்டுள்ளதாக ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இக்கடத்தல் சம்பவத்தில் ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ‘கதாயிப் ஹிஸ்புல்லா’ (Kata’ib Hezbollah) தொடர்புபட்டிருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் வௌியிடப்பட்டுள்ளது.
கடத்தல்காரர்களை ஈராக் பாதுகாப்புப் படைகள் பின்தொடர்ந்து விரட்டியபோது ஏற்பட்ட வாகன விபத்தில், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்டகாலமாக ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா போன்ற போர் வலயங்களில் பணியாற்றி வரும் அனுபவம் மிக்க ஊடகவியலாளரான ஷெல்லி கிட்டில்சனுக்கு, கடத்தப்படுவதற்கு முதல் நாள் இரவு கூட அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
கதாயிப் ஹிஸ்புல்லா அமைப்பின் கடத்தல் பட்டியலில் இவரது பெயர் இருந்ததைச் சுட்டிக்காட்டி பலமுறை எச்சரிக்கப்பட்டும், அவர் தனது கடமையைத் தொடர்ந்த நிலையில் இந்தக் கடத்தல் அரங்கேறியுள்ளது.
ஷெல்லி கிட்டில்சனைப் பாதுகாப்பாக மீட்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI), தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஈராக் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் இணைந்து பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
அவர் பணியாற்றும் ‘அல்-மானிட்டர்’ செய்தி நிறுவனம், அவரது பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலை வௌியிட்டுள்ளதுடன், அவரை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.



