இலங்கையில் சீனி விலை திடீர் உயர்வு.. இந்திய ஏற்றுமதித் தடையால் நுகர்வோர் தவிப்பு!
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களாகச் சீனியின் விலை சற்று அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அமெரிக்க டாலரின் மதிப்பு காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகச் சீனி இறக்குமதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, உள்நாட்டுத் தேவையைக் கருத்திற்கொண்டு கடந்த 15-ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சீனி ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்தத் தடை இலங்கை வர்த்தகர்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்தியத் தடையைத் தொடர்ந்து, இலங்கை தற்போது புதிய சர்வதேசச் சந்தைகளை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம், இந்தியாவுக்கு மாற்றாகப் பிரேசில் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சீனியை இறக்குமதி செய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாட்டில் தற்போதைக்கு அடுத்த 3 மாதங்களுக்குப் போதுமான சீனி கையிருப்பில் உள்ளதால் நுகர்வோர் அச்சப்படத் தேவையில்லை என்றும், சந்தையில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என்றும் அந்தச் சங்கம் உறுதியளித்துள்ளது.




