தமிழக அரசியலில் வெடித்தது மோதல்! – எம்பி அர்ச்சுனாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எச்சரிக்கை!
இலங்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய யாழ் மாவட்ட எம்பி ராமநாதன் அர்ச்சுனா, தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானைக் கடுமையாகச் சாடியதோடு, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” எனப் பகிரங்கமாகக் கொ*லை மிரட்டல் விடுத்துப் பேசியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்துத் தமிழ்நாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “75 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் நடத்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும், ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு உணர்த்தியிருக்கிறது.
இச்சூழலில் அர்ச்சுனாவின் பேச்சு ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது” எனச் சாடியுள்ளார்.
மேலும் தனது அறிக்கையில், “தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியல் வளர்வதைச் சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளின் ஏவலாளியாகச் செயல்பட்டு, தமிழர் ஒற்றுமையைக் குலைக்கத் துடிக்கும் இந்தத் துரோக அரசியலைத் தமிழினம் ஒருபோதும் அனுமதிக்காது” என ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
அண்டை நாட்டின் எம்பி ஒருவர் இவ்வாறு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதைச் சம்பந்தப்பட்ட அரசுகள் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ள அவர், எம்பி அர்ச்சுனா தனது பேச்சைத் திரும்பப் பெற்று, தம்பி சீமானிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.




