கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! புலனாய்வுக்குழுக்கள் தீவிர விசாரணை
கொழும்பு – வெலிக்கடை பகுதியில் கடந்த மே மாதம் 29 ஆம் திகதியன்று நள்ளிரவு நேரத்தில், வாடகைக்கார் சாரதி ஒருவரை ஒரு கும்பல் வழிமறித்து, ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி அவரிடமிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த கொ*டூரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் மொபைல் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாகப் புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்த வெலிக்கடை பொலிஸார், சிசிடிவி காட்சிகளின் துணைக் கொண்டு, இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் ஒருவரை அடையாளம் கண்டு தற்போது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் அதேவேளை, இக்கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மர்மக் கும்பலின் ஏனைய உறுப்பினர்களை மிக விரைவாகக் கைது செய்வதற்காக இரண்டு விசேட புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





