சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் : காயமடைந்த 17 வயது சிறுமியும் உயிரிழப்பு
சென்னையில் இடம்பெற்ற அதிர்ச்சி தரும் கார் மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பயணித்த 17 வயது சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதுடைய யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் ஊடாக சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நட்புறவு ஏற்படுத்தியிருந்தார்.
அந்த தோழியை சந்திப்பதற்காக சென்னை சென்றிருந்த யான்சி, இரவு நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு மற்றொரு தரப்பினருடன் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, இரு தரப்பினரையும் விடுதியின் பாதுகாப்பு பணியாளர்கள் வெளியேற்றியுள்ளனர். பின்னர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த யான்சி மற்றும் அவருடன் இருந்த சிறுமி மீது, முன்பு முரண்பட்ட தரப்பைச் சேர்ந்தவர்கள் காரை வேகமாக செலுத்தி மோதியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயது சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
விபத்துக்குப் பின்னர் சுயநினைவை இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பாக கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், பாலகுரு மற்றும் அவரது நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய கேளிக்கை விடுதிக்கும் அதிகாரிகள் முத்திரையிட்டுள்ளதுடன், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரட்டை உயிரிழப்பு சம்பவம் தமிழகத்திலும் இலங்கையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




