2025 இல் அரச ஊழியர்கள் வழங்கப்போகும் மாறுபட்ட உறுதிமொழி!
2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி, அரச சேவையாளர்கள் தங்கள் கடமைகளை ஆரம்பிக்கும் போது வழங்கும் உறுதிமொழி இம்முறை மாறுபட்டதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் முன்னெடுக்க உள்ள ‘தூய்மையான இலங்கை’ திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழி இந்த முறை வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று உள்ள பிரச்சனைகள் தீர்க்கும் நோக்கத்தில், சுகாதாரமான சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற புதிய திட்டங்களுடன் ‘தூய்மையான இலங்கை’ திட்டம் பல்வேறு பரிமாணங்களில் செயல்படுத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஜனவரி 1ஆம் தேதி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், அரச சேவையாளர்கள் தங்கள் உறுதிமொழி வழங்கும் போது, ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவதாகும் உறுதிமொழியும் சேர்க்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, ‘தூய்மையான இலங்கை‘ திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், அதனை மேலும் பலனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெறப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.