பேருந்து மிதிபலகையில் நின்று முகம் கழுவ முயன்ற குடும்பஸ்தர் தூக்கி வீசப்பட்டு உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயன்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், வேகமாகக் கீழே தூக்கி வீசப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தைச் சேர்ந்த 35 வயது கருப்பையா சிவகுமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் (டிசம்பர் 8) காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, செம்மணிப் பகுதியில் வைத்துப் பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார்.
பலி: அப்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பியபோது, அவர் நிலைதடுமாறிக் கீழே விழுந்து மயக்கமுற்றார். உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். பேருந்துகளில் மிதிபலகையில் நின்று பயணம் செய்வதன் ஆபத்து குறித்து மீண்டும் ஒருமுறை இந்தச் சோகச் சம்பவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





