யாழ்- நெல்லியடி மத்திய கல்லூரியில் மாணவன் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை
யாழ் – நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் புதிதாக இணைந்து கொண்ட மாணவன் மீது, தரம் 10 மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய,
இவ் விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம் விசாரணைகளை நடாத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக நெல்லியடி மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய தீர்வு வழங்கும் வரை கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரம் 06 இல், கல்லூரியில் புதிதாக இணைந்த புதுமுக மாணவன் மீது கடந்த 22 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மாணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனை ஆளுநர் செயலகத்தின் உத்தியோகத்தர் குழாம் நேரில் சென்று நலன் விசாரித்ததுடன், மாணவன் மீதான தாக்குதல் தொடர்பிலும் அறிந்துக்கொண்டனர்.