யாழ் நல்லூர் பகுதி விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
யாழ். நல்லூர் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி அன்று இடம்பெற்ற விபத்து தொடர்பில் பூரண விசாரணை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவருக்கு, வடமாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், விபத்துடன் தொடர்புடைய பஸ்சின் வழிதட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, பொலிசாரின் விசாரணைகளுக்கு மேலதிகமாக தமது அதிகார சபையின் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்திற்குள் சேவையில் ஈடுபடும் அனைத்து மினி பஸ் உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அறிவுறுத்தல்களை பின்பற்றாத பஸ்களின் வழிதட அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் வட பிராந்திய தலைவர் தெரிவித்தார்.