இலங்கையை நெருங்கும் காற்றழுத்தம்! – நாடு முழுவதும் கனமழை நீடிக்கும்!
வங்காள விரிகுடாவில் நிலவி வந்த வளிமண்டலச் சீரற்ற நிலை, தற்போது இலங்கையின் அண்மைப் பகுதியில் குறைந்த காற்றழுத்தப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய தகவலின் படி, இது 10.1 வட அட்சரேகை மற்றும் 82.5 கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகே நிலைகொண்டுள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை மாற்றத்தால் தீவைச் சூழ்ந்துள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இதனால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் மறு அறிவித்தல் வரும் வரை அவதானமாக இருக்குமாறு இயற்கை பேரிடர் முன் எச்சரிக்கை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





