பதிவு செய்யப்பட்டாத வைத்திய நிலையமொன்றை நடத்தி, போலி வைத்தியத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாக பல தரப்பினராலும் எச்சரிக்கப்பட்ட உரும்பிராயை சேர்ந்த நபர் ஒருவரை யாழ். நீதவான் நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கப்பட்டு பிணையில் செல்ல அனுமதித்தது.
சம்பவம் தொடர்பில் தெரிவதாவது யாழ்ப்பாணம், உரும்பிராயை சேர்ந்த கதிரவேலு ரகுராம் என்ற நபர், சிகிச்சை நிலையமொன்றை நடத்தி வந்தார்.
அக்குபஞ்சர் வைத்தியமளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், அது பதிவு செய்யப்பட்ட வைத்திய நிலையமாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்பட்டது.
“அங்கு சிகிச்சை பெற்ற சிலர் மரணமடைந்ததை தொடர்ந்து, மரணங்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, அந்த போலி வைத்திய நிலையம் பற்றிய தகவல் தெரிய வந்தது“ என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை கிளை அண்மையில் தெளிவுபடுத்தியிருந்தது.
அது பதிவு செய்யப்பட்டாத போலி வைத்திய நிலையம் என்பது தெரிய வந்ததையடுத்து, இந்த விவகாரம் விஸ்பரூபம் பெற்றது.
ஆரம்பத்தில் அக்குபஞ்சர் சிகிச்சையளிப்பதாக குறிப்பிடப்பட்ட போதும், பின்னர் நாடி வைத்தியர், கீலிங் சிகிச்சை என குறிப்பிடப்பட்டது. சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கலாமென கருதப்பட்டது. அத்துடன், தன்னை தெய்வ வைத்தியராகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உரும்பிராயில் போலி வைத்தியம் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியும் விழிப்புணர்வு பதிவொன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
போலி வைத்திய நிலையத்தை நடத்துயது மட்டுமல்லாமல், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில வைத்தியம் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பி பொதுமக்களை திசைதிருப்பி வந்ததுடன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான அவதூறுகளையும் பரப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதையடுத்து, கடந்த புதன்கிழமை யாழ் பொலிஸ் நிலையத்திற்கு ரகுராம் என்ற நபர் அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இன் நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
ரகுராம் சார்பில் சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையாகினார்.
ஆங்கில வைத்திய முறைக்கு எதிரான போலித் தகவல்களை பரப்புவது, வைத்தியர்களுக்கு எதிரான அவதறு பரப்புவது போன்றவற்றிற்கு நீதிபதி கடுமையான எச்சரிக்கை செய்து பிணையில் விடுத்தார்.
தனது வாடிக்கையாளர் இவ்வாறான பிழையான நடவடிக்கைகளில் இனிமேல் ஈடுபட மாட்டார் என சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றில் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ரகுராமை கடுமையாக எச்சரித்த, நீதவான் வழக்கை ஒத்தி வைத்தார்.