அபிவிருத்தி என்பது வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல – ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சிறப்புரை!
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகள் பிரிவின் வருடாந்த விரிவுரையின் பிரதம அதிதியாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார்.
‘அபிவிருத்தியின் அரசியல்: இலங்கையும் அதற்கு அப்பாலும்’ எனும் தலைப்பில் உரையாற்றிய அவர், “அபிவிருத்தி என்பதை வெறும் கொள்கைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார மாதிரிகளின் ஊடாக மாத்திரம் புரிந்துகொள்ள இயலாது.
அது மக்களின் அன்றாட வாழ்வியல் அனுபவங்களின் ஊடாகவே நோக்கப்பட வேண்டும்” என எதார்த்தத்தை உடைத்துப் பேசினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், பாரம்பரியப் பொருளாதார அமைப்புகளில் குடும்பங்களுக்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பெண்கள் பெற்றுக்கொடுக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போவதை மறைக்காமல் சுட்டிக்காட்டினார்.
நிலைபேறான அபிவிருத்தி என்பது மனித கௌரவம் மற்றும் நீதியைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் போராட்டங்களை நீண்டகாலக் கொள்கைச் சீர்திருத்தங்களாக மாற்றுவதற்குப் பொறுமை, பேச்சுவார்த்தை மற்றும் தொடர்ச்சியான மக்கள் ஈடுபாடு அவசியம் என்றார்.
இந்த விரிவுரையைத் தொடர்ந்து, நல்லாட்சி, நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் குறித்துப் பார்வையாளர்களுடன் ஒரு ஆரோக்கியமான விவாதமும் நடைபெற்றது.





