குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு 133 பேருடன் புறப்பட்டு சென்ற போது விழுந்து நொருங்கிய, சீனாவின் ஈஸ்டர்ன் எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 1:15 மணிக்குப் புறப்பட்ட விமானம் குவாங்ஸி அருகே மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து கடுமையான புகை எழுந்துள்ளது.
இந்த விமானம் செங்குத்தாக மலையின் மீது வேகமாக மோதும் கண்காணிப்பு கருவி காட்சிகளும், விமான விபத்துக்குள்ளான மலைப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
விமானத்தில், 123 பயணிகளும் 9 பணியாளர்களும் இருந்தனர் என்றும், அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்றும் சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
450 மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் அங்கு சென்றடைய பல மணிநேரங்கள் எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஈஸ்டர்ன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-800 ரக விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அந்த விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.