யாழில் உள்ள இந்து ஆலயங்கள் வருமானம் உழைக்கும் நிறுவனங்கள, இவற்றால் எமது மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கலாநிதி ஆறு திருமுருகன் பிறந்தநாள் நிகழ்வில் பிரதமர் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மண்ணில் வரலாற்றுப் புகழ் பூத்த, பெரும் சைவக் குடிகள் நிறைந்த பகுதிகளில் அமைந்துள்ள பேராலயங்கள் யாவும் நீதிமன்ற வழக்குகளுக்கு உட்பட்டிருக்கின்றன.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம், சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாள், நல்லூர் கைலாச பிள்ளையார் ஆலயம் உட்படப் பல ஆலயங்களுக்கும் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு கோயில் ஆலய பரிபாலனசபையினர் என்னிடம் வந்து நீங்கள் நேரடியாக வருகை தந்து பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என விடாப்பிடியாக நின்றார்கள்.
அந்த ஆலயத்தில் இதுவரை சுமார் 15 கிலோ தங்கநகைகள் காணப்படுவதாக அறியக் கிடைத்தது. இவ்வாறு பெரும் சொத்துக்கள் கொண்ட பல ஆலயங்கள் எமது யாழ். மாவட்டத்தில் காணப்பட்டபோதிலும் இந்த ஆலயங்கள் எமது மக்களுக்கு என்ன செய்கின்றன?
முன்னைய காலங்களில் கிராமங்களில் அமைந்துள்ள ஆலயங்களை நல்ல அருளுடைய தெய்வங்கள், பேசும் தெய்வங்கள் என்றெல்லாம் கூறு வார்கள். ஆனால், தற்போது ஆலயங்களெல்லாம் வருமானம் உழைக்கின்ற வியாபார நிறுவனங்களாகிவிட்டன.
“நீ கல்லாலான ஒரு விக்கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றாய், அதற்கு அபிஷேகம் செய்கின்றாய், ஆனால், உயிரோடு உலாவுகின்ற ஆயிரம் சிவலிங்கங்கள் உன்னைச் சுற்றியிருக்கின்றன அவற்றைப் போசித்துக் கொள்’ என உபநிடதத்தில் ஒரு வசனமிருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ஆகவே இவ்வாறு ஆலயங்கள் இருக்கும் நிலையில் எமது மக்களுக்கு இவற்றால் என்ன பயன் என அவர் மேலும் தெரிவித்தார்.