71 முறை பிரதமர் பதவியை தாம் நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு துரோகமிழைக்காமல், அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே, பிரதமர் பதவியை தற்போதும் நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்மை ராஜபக்ச குடும்பத்திற்குப் பொறுப்பான பிரதம பாதுகாப்பு அதிகாரியாகவோ அல்லது அவர்களின் பராமரிப்பாளராகவோ பொறுப்பேற்குமாறு கேட்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கொள்கைகளுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும், 20 ஆவது திருத்தத்தை நிராகரிக்கவும் தாம் தயார் எனவும், சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு மக்களுக்கு மனித உரிமைகள், பொருளாதார உரிமைகளை வழங்கி அந்தக் கடமையை நிறைவேற்றத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் மற்றும் தார்மீகக் கோட்பாடுகளை மதிக்கும் புதிய அரசியல் பயணத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வாறாயினும், மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.