வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
வல்வெட்டித்துறையில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் நாளன்று பட்டத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
வரும் தைப்பொங்கல் தினத்தன்று பட்டத் திருவிழாவை, இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன், அரசு விழாவாக, சர்வதேச பட்டத் திருவிழாவாக கொண்டாடுவதற்கு ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அமைச்சர் நாமல் ராஜபக்சவைச் சந்தித்து அவர்கள், இதுதொடர்பாக கலந்துரையாடி அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமைக்கு, நகரின், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஜேர்மனியில் உள்ள வல்வை ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்
தமிழின அழிப்பை நடத்தியும் தமிழர்களது பூர்வாங்க நிலங்களை பறித்தெடுத்தும், எண்ணில் கணக்கற்ற தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் சிறையில் அடைத்தும், தனது அடக்குமுறை ஆட்சியை நடாத்தி வருகின்ற சிறிலங்கா அரசின் அமைச்சரும், பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சவையும் இன அழிப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களையும் பட்டத்திருவிழாவிற்கு அழைப்பதானது எமது இனத்திற்கு இழைக்கும் வரலாற்று தவறாகும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், தமிழினத்தின் வாழ்வைச் சிதைத்தவர்களை நாமே அழைத்து பட்டத் திருவிழா நடத்துவதை ஏற்க முடியாது என்றும், தனித்துவமான முறையில் பட்டத் திருவிழாவை நடத்துமாறும் அல்லாவிட்டால் இந்த முறை பட்டத்திருவிழாவை நடத்தாமல் விடுவதே மேன்மை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






