இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் மரணம்! – இளைய சகோதரருக்கு பிணை
கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாயார், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்பட்ட நோயினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தை அடுத்து இஷாரா செவ்வந்தி தப்பியோடியபோது, காவல்துறையினர் அவரது தாயாரையும், இளைய சகோதரரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையிலிருந்தபோது ஏற்பட்ட நோயால் இஷாராவின் தாயார் உயிரிழந்துள்ளதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சகோதரருக்கு பிணை உத்தரவு
இதேவேளை, இஷாரா செவ்வந்தியின் இளைய சகோதரரான சமிந்து திவங்க வீரசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி லால் ரணசிங்க பண்டார (17) உத்தரவிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான சமிந்து திவங்க வீரசிங்கவை, தலா 200,000 ரூபாய் மற்றும் 100,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவானுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சந்தேகநபர் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சிதாந்த ஜெயவர்தன, “இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தனது கட்சிக்காரர் எந்த வகையிலும் குற்றத்தில் ஈடுபட்டதாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. அவர் கைது செய்யப்பட்டதற்கான ஒரே காரணம் அவர் இஷாரா செவ்வந்தியின் சகோதரர் என்பதுதான்” என்று சமர்ப்பித்த வாதங்களை ஏற்றுக்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரான இஷார செவ்வந்தியை கைது செய்ய முடியாததால், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த இளைஞனையும் அவரது தாயாரையும் கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.





