லசந்த விக்கிரமசேகர கொலை: செயற்கை நுண்ணறிவு (AI) உதவியால் துப்பாக்கிதாரி சிக்கினார்!
மாத்தறை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரியை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உளவுத்துறை அதிகாரி ஒருவர் அடையாளம் கண்டு கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் (ஒக்டோபர் 26) கொழும்பு, மகரகம – நாவின்ன பகுதியில் வைத்துத் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த அதிநவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
AI-ஆல் சிக்கியது எப்படி?
விசாரணைக் குழுக்களால் பெறப்பட்ட துப்பாக்கித்தாரியின் தெளிவற்ற படம், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டு, விசாரணை அதிகாரிகளுக்குக் காட்டப்பட்டது.
இந்த AI படங்களின் அடிப்படையில், மகரகம – நாவின்ன பகுதியில் உள்ள ஒரு தொலைபேசிக் கடையிலிருந்து வெளியே வந்தபோது, உளவுத்துறை அதிகாரி ஒருவர் அவரை உடனடியாக அடையாளம் கண்டுள்ளார்.
அந்த அதிகாரி உடனே தகவல் வழங்கியதன் பேரில், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலைக்கு முன்பே, துப்பாக்கித்தாரி பயன்படுத்திய தொலைபேசி மற்றும் சிம் அட்டையின் நெட்வொர்க் பகுப்பாய்வே, இத்தகைய வேகமான கைது நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிதாரி உட்பட ஆறு சந்தேக நபர்களை மேலும் விசாரிப்பதற்காக 72 மணி நேரத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.





