வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை: துப்பாக்கிதாரி உட்பட 7 பேர் அதிரடிக் கைது!
மாத்தறை மாவட்டம், வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர படுகொலை தொடர்பில், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் உட்பட 7 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 26) கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, அனுராதபுரம், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர், கொழும்பு – மகரகம – நாவின்ன பகுதியில் வைத்து இறுதியாகக் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
முன்னதாக, துப்பாக்கிதாரியின் மனைவி, துப்பாக்கிதாரியை உந்துருளியில் அழைத்துச் சென்றவர் மற்றும் அவர்கள் மறைந்திருக்க உதவியவர் ஆகிய மூவர், அனுராதபுரம் – கெக்கிராவை பகுதியில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி, 12 இலட்சம் ரூபா பணம், ஐஸ் போதைப்பொருள் என்பவையும் கைப்பற்றப்பட்டன.
இதேபோன்று, இந்தக் கொலை தொடர்பில் மாத்தறை மாவட்டத்திலும் நேற்றுப் பிற்பகல் இருவர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், இந்தக் கொலைக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் காலி – ஹியாரே பகுதியில் வைத்து நேற்றுப் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.





