நாவலப்பிட்டி-கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் போக்குவரத்துக்காக திறப்பு!
‘டித்வா’ புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவுக்குள் சிக்கி மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி, 18 நாட்களுக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 15, 2025) காலை 7 மணி முதல் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
வீதி மேம்பாட்டு ஆணையம், நாவலப்பிட்டி மற்றும் அத்கல காவல் நிலையங்கள், பஸ்பாகே கோரளைப் பிரதேச சபை, நாவலப்பிட்டி நகரம் உள்ளிட்ட பல தரப்பினரின் பங்கேற்புடன் அண்மைய தினங்களாகப் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மண்சரிவு காரணமாக வீதியில் விழுந்த மண்ணை அகற்றி வீதி போக்குவரத்துக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி, வீதி அமைப்பை விரைவில் மீட்டெடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
வீதிக்கு மேலே மண்சரிவு ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதால், நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பாதுகாப்பான போக்குவரத்தை அனுமதிக்கும் வகையில் வீதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பணிகள் நிறைவடையும் வரை வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் வீதியில் வாகனத்தைச் செலுத்துமாறு வீதி மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த வீதியில் கனரக வாகனங்கள் செல்வதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





