மலேசிய அழகுக்கலை போட்டியில் 5 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை: இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்!
மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அழகுக்கலை மற்றும் சிகையலங்காரப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு ஐந்து பதக்கங்களை வென்று சாதனை படைத்த இலங்கையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர்கள், நேற்று இரவு தாய் நாட்டை வந்தடைந்தனர்.
வரவேற்பும் பங்கேற்பும்
அவர்களை, சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைக்கான தூதுவரான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ அவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
இப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஏழு அழகுக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இவர்களை இலங்கையின் அழகுக்கலை நிபுணரும், பயிற்சியாளருமான கயல்விழி ஜெயபிரகாஷ் அழைத்துச் சென்றிருந்தார்.
யாழ்ப்பாணப் பெண் இரட்டைப் பதக்கம்
இலங்கையின் சார்பில் போட்டியிட்டவர்களில், யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த சுலக்ஷனா சஞ்சீவன் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்று, இரண்டு பதக்கங்களைத் தனது பெயரில் பதிவு செய்தார்.

ஊடகங்களுக்கு சுலக்ஷனா சஞ்சீவன் வழங்கிய கருத்து:
சர்வதேச தரம் வாய்ந்த ஒரு அழகுக்கலைப் போட்டி நிகழ்ச்சியில் 14 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான போட்டியாளர்களுடன் போட்டியிட்டுப் பதக்கம் வென்றது இலங்கைக்கு ஒரு பெருமை சேர்க்கும் விடயமாகும்.

“குறிப்பாக வட பகுதியில் இருந்து கலந்து கொண்ட போட்டியாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்திப் பதக்கங்களை வென்றது எமக்கு இரட்டைப் பெருமை மிகு தருணமாகும்” என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த வருடமும் இப்போட்டியில் கலந்து கொண்டு அதிக அளவு பதக்கங்களை வெல்வதற்குத் தாங்கள் உத்வேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வெற்றி, ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற போட்டியில், இலங்கைக் குழுவின் அழகுக்கலைத் திறனை மீண்டும் சர்வதேச அளவில் உறுதிப்படுத்தியுள்ளது.






