கைது செய்த இந்திய மீனவர்களை உரிய சட்ட நடவடிக்கைகு உட்படுத்தவும் – சமாச உப தலைவர் மகேசன் வேண்டுகோள்
பருத்தித்துறைக் கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என வலி வடக்கு சமாசத்தின் உப தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட தொழிலாளர் கிராமிய சங்கத்தின் பொருளாளருமான செல்வராசா மகேசன் கோரிக்கை விடுத்தார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் சமாசத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடபகுதி கடலில் அத்துமீறி மீன்பிடி
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களால் யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் நீண்ட காலமாக பல பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர்.வடபகுதி கடலில் அத்துமீறி மீன்
நேற்றுமுன்தினம் வடபகுதி கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியா மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தார்கள்.
இலங்கை கடற்படை கைது செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு தொடர்ச்சியாக எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்ய வேண்டும்.
அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பத்துக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை கடற்படை கைது செய்த போதும் அவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்ட நிலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட போதும் இந்தியாவில் இருந்து விடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான அழுத்தங்களை வழங்கினாலும் உரிய தரப்பினர் அதற்கு இடம் கொடுக்காமல் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வளங்களை சுரண்டுவதற்காக வருகை
ஆகவே எமது மீனவர்களின் தொழில்களை அழிப்பதற்கும் வளங்களை சுரண்டுவதற்காக வருகை தரும் இந்திய மீனவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டக்கூடாது ஏனெனில் அவர்கள் எமது தொப்புள் கொடி உறவு என்றால் எம்மை அழிக்க முயற்சிக்க மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் சம்மேளனச் செயலாளர் அன்ரன் ஜெபராசா, யாழ்ப்பாண மாவட்ட கிராமிய சம்மேளனங்களில் உப தலைவர் அந்தோணி பிள்ளை மரியதாஸ் , வலி வடக்கு சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் றேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.