நாட்டில் உணவு பொதியிடலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான பொலித்தீன்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் அமைச்சர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தாலும், இந்த முடிவு முறையாக செயல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வகையான பொலித்தீன்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் மண்ணில் சிதைந்தாலும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.