கடும் பனிப்பொழிவால் 223 சாலைகள் மூடப்பட்டு, நால்வர் உயிரிழப்பு!
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிம்லா, மணாலி போன்ற இடங்களுக்குக் குறுகிய காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்தபோது, கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவின் காரணமாக குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக, ஹிமாச்சலில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட 223 சாலைகள் மூடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிம்லா, குலு, மண்டி, சம்பா மற்றும் சிர்மௌர் மாவட்டங்களில், கின்னவுர், லாஹவுல், ஸ்பிதி ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், பனி நிறைந்த மலைப் பகுதிகளுக்கு செல்லும் வழிகளில் மோசமான வானிலை மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் இருந்தபோதும், சுற்றுலாப் பயணிகள் பயணிக்க தடை விதிக்கப்படவில்லை.
மேலும், திங்கள்கிழமை (23) அடல் சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளை மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் மீட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், பல வாகனங்கள் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானதால் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சிம்லாவில் 145 சாலைகள், குலுவில் 25 சாலைகள், மண்டி மாவட்டத்தில் 20 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 356 மின்மாற்றிகள் பழுதடைந்து, பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.