இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா மீண்டும் வழங்கியுள்ள அத்தியாவசிய மருந்துகள்
இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வலுப்படுத்தும் வகையில், இலங்கைக்கான அனர்த்த நிவாரணப் பணிகளுக்கு உதவும் முகமாக, இந்திய அரசாங்கம் 17 வகையான அத்தியாவசிய மருந்துகளுடன் 15 டன் எடையுள்ள உலர் உணவுப் பொருட்களின் தொகுதியை இலங்கையிடம் கையளித்துள்ளது.
இந்தியாவின் துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யன்ஜல் பாண்டே அவர்கள், கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்த மனிதாபிமான உதவியை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுடனான கலந்துரையாடலை அடுத்து, இந்திய விமானப்படையின் C-17 ரக விசேட விமானம் மூலம் இந்த மருந்துகள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன.
நன்கொடையாக வழங்கப்பட்ட மருந்துகளில், இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு மேலாண்மை மற்றும் தொடர்புடைய சிக்கல்கள், அத்துடன் பல மருத்துவ நிலைமைகளுக்குப் பயன்படுத்தப்படும் 17 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடங்கும்.
இந்த உதவிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள், “எங்கள் தேவை நேரத்தில் இலங்கையுடன் துணை நின்றமைக்காக இந்தியாவிற்கு நன்றி கூறினார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் உரையாற்றிய டாக்டர் சத்யன்ஜல் பாண்டே அவர்கள், நெருக்கடி காலங்களில் இந்தியா தொடர்ந்து இலங்கையுடன் துணை நின்று, நம்பகமான அயல் நாட்டின் பாத்திரத்தை நிரூபித்துள்ளது என்று நினைவுபடுத்தினார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிக்க இந்திய அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
சுகாதார அமைச்சின் சர்வதேச சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் அனில் சமரநாயக்க, மருத்துவ நிர்வாகச் செயலாளர் டாக்டர் அரோஷ் விஜேவிக்ரம உள்ளிட்ட இந்திய உயர்ஸ்தானிகர் அதிகாரிகள் மற்றும் இலங்கை அரசின் சிரேஷ்ட பிரதிநிதிகள் பலரும் இந்தக் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.





