தனியார் காணியில் விகாரை அமைத்தது மகா தவறு – நயினாதீவு விகாராதிபதி அதிரடிப் பேட்டி!
யாழ்ப்பாணம், தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில், இராணுவத்தினருடன் இணைந்து மக்களின் காணிகளை அபகரித்து விகாரை கட்டியமை மிகப்பெரிய தவறு என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி சிறீ நவடகல பதும கீர்த்தி திஸ்ஸ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மற்றவர்களின் பொருட்களை எடுக்கக்கூடாது என்று புத்தர் போதித்திருக்க, ஒரு பௌத்த துறவி பிறர் காணியை அபகரித்து விகாரை கட்டியது மகா தவறு என அவர் சாடினார்.
காணிகளை நான்கு கட்டங்களாக விடுவிப்பதாகக் கூறுவது மக்களை ஏமாற்றும் நாடகம். காலத்தைக் கடத்தாமல் அனைத்துக் காணிகளையும் ஒரே கட்டமாக விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
காணி இழந்த மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது. யாழ்ப்பாண நாக விகாரை விகாராதிபதியும் இதே கருத்தைக் கொண்டுள்ளதால், தையிட்டி விகாராதிபதி புதிய கட்டுமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வீதியில் நின்று போராடும் மக்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதை நிறுத்திவிட்டு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
நேற்று தையிட்டி பகுதிக்கு நேரில் சென்ற நயினாதீவு விகாராதிபதி தலைமையிலான பிக்குகள் குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்த பின்னரே இந்த அதிரடிக் கருத்துக்களை வெளியிட்டனர்.





