திருகோணமலையில் இந்தியாவின் மாபெரும் எரிசக்தித் திட்டம்!
கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதே நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு ஒரே வழி என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்தத் திட்டத்தை விரைவுபடுத்தத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இதற்கான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் இந்தியத் தலையீடுகளைக் கடுமையாக எதிர்த்து வந்த ஜே.வி.பி (JVP) தலைமையிலான தற்போதைய அரசாங்கம், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்திற்கொண்டு இந்தத் திட்டத்தை முன்னெடுப்பது ஒரு முக்கிய அரசியல் மாற்றமாகக் கருதப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை மூடல் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நீண்டகால எண்ணெய் சேமிப்பு உத்தியொன்று அவசியம் என அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் திட்டம் தொடர்பாக இலங்கை சமர்ப்பித்துள்ள கருத்துருவை (Concept Note) இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தற்போது ஆய்வு செய்து வருகின்றன.
எரிசக்தி அமைச்சு சில தொழில்நுட்ப ஆய்வுகளை நிறைவு செய்தவுடன், சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான டெண்டர் நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு தசாப்தங்களாக இழுபறியில் இருந்த இந்தத் திட்டம், தற்போதைய உலகப் போர்ச் சூழலில் இலங்கைக்குப் பெரும் பொருளாதாரப் பலத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





