மட்டக்களப்பு பாழடைந்த கிணறு விவகாரம் ; கைதானவர்களின் பகீர் வாக்குமூலம்
மட்டக்களப்பில் பெண்களை ஏமாற்றிக் கடத்தி, கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களிடமிருந்து திடுக்கிடும் வாக்குமூலங்கள் வெளியாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட சுமார் 19 பவுண் தங்க நகைகளை, 50 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தத் திருட்டுப் பணத்தைக் கொண்டே, மாதாந்தத் தவணைக்கட்டண அடிப்படையில் பல சொகுசு வாகனங்களை அவர்கள் கொள்வனவு செய்துள்ளமை காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
கொள்ளையடித்த நகைகளை முதலில் அடகு வைத்து, பின்னர் அவற்றை மீட்டு வேறு இடங்களில் விற்பனை செய்துள்ளனர். இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணை நின்ற இரண்டு நகையக உரிமையாளர்களும் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட யுவதியை தொடர்ந்து , உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணின் உடலம் மற்றும் இந்த பாரிய குற்றச் செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 03 பிரதான சந்தேகநபர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மாஅதிபரின் நேரடிப் கண்காணிப்பில், விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ரி.மேனன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் கும்பலால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.





