அமெரிக்க வீரர்கள் வளைகுடாச் சுறாக்களுக்கு உணவாவார்கள்! – ஈரான் விடுத்த மரண எச்சரிக்கை!
ஈரானியத் தரைப்பரப்பை ஆக்கிரமிக்கவோ அல்லது தரைவழித் தாக்குதலை முன்னெடுக்கவோ அமெரிக்கா முயன்றால், அதன் விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளதாக tasnim news செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் Khatam al-Anbia மத்திய தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சொல்ஃபகாரி இன்று (29.03.2026) விடுத்துள்ள அறிக்கையில், “எங்கள் எல்லைக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள் பாரசீக வளைகுடாச் சுறாக்களுக்கு உணவாவார்கள்” எனப் பகீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானியத் தீவுகளை ஆக்கிரமிப்பது குறித்து வெளியிட்டு வரும் மிரட்டல்கள் யதார்த்தத்திற்குப் புறம்பானவை எனச் சாடியுள்ள சொல்ஃபகாரி, ட்ரம்ப் புற அழுத்தம் காரணமாகவே இவ்வாறான முடிவுகளை எடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கத் தலைமைத்துவம் எடுத்துள்ள தவறான முடிவுகள், அதன் படைகளை ஒரு “மரணப் பொறியில்” (Deadly Quagmire) தள்ளியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் தாக்குதல்களால் சிதைக்கப்பட்டுள்ள தமது இராணுவத் தளங்களை விட்டு வெளியேறியுள்ள அமெரிக்கப் படைகள், பிராந்திய நாடுகளின் சிவிலியன் மற்றும் பொருளாதார மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
எவ்வாறாயினும், அங்கேயும் அவர்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், ஈரானியப் படைகளின் தாக்குதலுக்கு அவர்கள் இலக்காகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். “எங்கள் வரலாற்றைப் படித்துப் பாருங்கள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இங்கு மரணமே மிஞ்சும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.





