இஸ்ரேலிய இரசாயன ஆலை மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்! – தெற்கு இஸ்ரேலில் உச்சகட்ட அபாய எச்சரிக்கை!
தெற்கு இஸ்ரேலின் பீர்ஷேபா (Beersheba) நகருக்குத் தெற்கே 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற நியோட் ஹோவாவ் (Neot Hovav) தொழிற்பேட்டையை இலக்கு வைத்து ஈரான் இன்று ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
அங்குள்ள ஒரு முக்கிய இரசாயன ஆலை மீது ஏவுகணை நேரடியாகத் தாக்கியதில், பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், ஆலையிலிருந்த அபாயகரமான இரசாயனப் பொருட்கள் கசியத் தொடங்கியுள்ளன. இந்தத் தாக்குதலில் இதுவரை 11 பேர் காயமடைந்துள்ளதாக அவசரகால சேவைப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆலைக்குள் இருக்கும் அபாயகரமான நச்சுப் பொருட்கள் வௌிப்புறக் காற்றில் கலக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, நியோட் ஹோவாவ் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகத் தத்தமது வீடுகளுக்குள் இருக்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை இறுக்கமாக மூடி வைத்திருக்குமாறும், மறு அறிவித்தல் வரும் வரை வௌியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் முக்கிய பொருளாதார மற்றும் தொழில்சார் மையங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இரசாயன ஆலைகளைத் தாக்குவதன் மூலம் பாரிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்த ஈரான் முயல்வதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர், இரசாயனக் கசிவைக் கட்டுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




