உணவு இடைவேளைக்குச் சென்றதால் மாணவனுக்கு சிகிச்சை வழங்க முடியவில்லை – இளவாலை வைத்தியசாலைப் பொறுப்பு அதிகாரி தெரிவிப்பு
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவன் ஒருவருக்குச் சிகிச்சை வழங்கப்படாமை மற்றும் வைத்தியர் கடமையில் இல்லாமை குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகம் அதிரடி விசாரணைகளை ஆரம்பித்தது.
இது குறித்து இளவாலை வைத்தியசாலைப் பொறுப்பு அதிகாரி மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கோரப்பட்ட விளக்கங்கள் இன்று (30.03.2026) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இளவாலை வைத்தியசாலைப் பொறுப்பு அதிகாரி சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தாம் உணவு இடைவேளைக்குச் சென்றிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது வைத்தியசாலைக்கு நிரந்தர சாரதி இல்லாமையால் நோயாளர் காவு வண்டி தற்காலிகமாக காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தமது வைத்தியசாலைக்குத் தாதிய உத்தியோகத்தர் (Nurse) எவரும் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் ஒரு அதிர்ச்சித் தகவலை வௌியிட்டுள்ளார்.
இதனிடையே, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், இனிவரும் காலங்களில் வைத்தியர்கள் தொடர்ந்து வைத்தியசாலையில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 28 ஆம் திகதி முதல் இளவாலைக்கு புதிய நோயாளர் காவு வண்டி வழங்கப்பட்டுள்ளதாகவும், தாதிய உத்தியோகத்தர் வெற்றிடத்தை நிரப்ப ஆளணிப் பிரிவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





