மணல்காடு சவுக்கம் காட்டில் கொழுந்துவிட்டு எரிந்த தீ! பருத்தித்துறை பிரதேச சபையின் துரித நடவடிக்கை
வடமராட்சி கிழக்கு மணல்காடு சவுக்கம் காட்டில் நேற்று (30.03.2026) பிற்பகல் திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் யுகதீஸின் அறிவுறுத்தலின் பேரில், உபதவிசாளர் காந்தரூபன், செயலாளர் மற்றும் சபையின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தண்ணீர் பாய்ச்சித் தீயானது மேலதிகப் பரவலின்றித் துரிதமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
குறித்த சவுக்கம் காட்டிற்குச் சில விஷமிகள் திட்டமிட்டு அடிக்கடி தீ வைப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பிரதேசவாசிகள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியை வனவளத் திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், சேத விபரங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மணல்காடு சவுக்கம் காட்டில் நாளாந்தம் 50-க்கும் மேற்பட்ட விறகு வியாபாரிகள் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டிச் செல்வதாகத் தெரியவருகிறது.
விறகுத் தேவைக்காக இக்காட்டுப் பகுதி சீரழிக்கப்பட்டு வருவதாகவும், மரங்களை எளிதாகக் கொண்டு செல்வதற்காகவே இவ்வாறான தீ வைப்புச் சம்பவங்கள் தூண்டப்படுகின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இயற்கை வளத்தைச் சுரண்டும் இச் செயற்பாடுகளைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





