எமக்கும் ரியாத் தாக்குதலுக்கும் தொடர்பில்லை! – ஈரானின் மறுப்பு!
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது கடந்த மார்ச் 3-ஆம் திகதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு இஸ்ரேலே காரணம் என ஈரான் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது. சவூதி அதிகாரிகள் கூறியதை விடவும் இந்தத் தாக்குதல் மிகப்பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ‘த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து ஈரானின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலை ஒரு சிறிய தீ விபத்து எனச் சவூதி பாதுகாப்பு அமைச்சகம் வர்ணித்திருந்தது. இருப்பினும், தூதரகத்தில் ஏற்பட்ட தீ பல மணிநேரம் நீடித்ததாகவும், குறிப்பிடத்தக்க அழிவை ஏற்படுத்தியதாகவும் ‘அல் ஜசீரா’ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவல்களை முற்றாக நிராகரித்துள்ள ஈரான், “இந்தத் தாக்குதலுக்கும் ஈரானிய ஆயுதப் படைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை” என்றும், இது பிராந்தியத்தைச் சீர்குலைக்க இஸ்ரேலியச் ‘சியோனிஸ்டுகளால்’ திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்றும் சாடியுள்ளது.
பிராந்தியத்தில் இஸ்ரேலின் ‘கலகச் செயல்பாடுகள்’ குறித்து முஸ்லிம் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள IRGC, அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டணியின் சதித் திட்டங்களுக்கு எதிராக அண்டை நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தைப் பதற்றத்திலேயே வைத்திருப்பதன் மூலம் தமது அரசியல் லாபங்களை அடையவே இஸ்ரேல் இவ்வாறான தாக்குதல்களைத் தொடுத்துவிட்டு ஈரான் மீது பழியைப் போடுவதாகத் தெஹ்ரான் குற்றம் சாட்டுகிறது.





