வடக்குக்கான தொடருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பம் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மஹவ முதல் ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதை புனரமைப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த வடக்கிற்கான தொடருந்து சேவைகள், எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத் தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் சுமார் இரண்டரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தச் சேவைகள், தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டுப் பயணிகளின் வசதிக்காக மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
மஹவ முதல் ஓமந்தை வரையான பாதையில் ஐந்து தொடருந்துப் பாலங்களை மாற்றியமைத்தல் மற்றும் யானைகள் கடந்து செல்வதற்கான சுரங்கப்பாதைப் புனரமைப்புப் பணிகள் என்பன வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, தொடருந்து பயணங்களுக்கான முற்பதிவுகள் இன்று (04.04.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பயணிகள் தமக்கான ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





