கல்லறை தோண்டப்பட்டு சடலத்தின் தலையை வெட்டி எடுத்து சென்ற மர்ம நபர்கள் – வவுனியாவில் பெரும் அதிர்ச்சி
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார்.
அவரது உடல் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நள்ளிரவு வேளையில் மர்ம நபர்களால் அந்தச் சடலம் மீண்டும் தோண்டப்பட்டு, அதன் தலைப் பகுதி மட்டும் துண்டித்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற மற்றுமொரு இறுதிச்சடங்கின் போது, குறித்த பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று பார்வையிட்ட போதே, கல்லறை தோண்டப்பட்டுச் சடலம் சிதைக்கப்பட்டுக் கிடக்கும் அதிர்ச்சித் தகவல் வௌிச்சத்திற்கு வந்துள்ளது.
உயிரிழந்த மகனின் உடலுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பால் அவரது பெற்றோர்கள் பெரும் மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா குற்றப்பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





