அர்ச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி உள்ளது! – சட்டத்தரணி உமாகரன் இராசையா அதிரடி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அர்ச்சுனா எம்.பி, தமிழக அரசியல் கட்சித் தலைவர் சீமானை அச்சுறுத்தும் வகையில், இந்தியாவுக்குச் செல்லும்போது துப்பாக்கி எடுத்துச் செல்ல முடிந்தால் அவரைச் சுட்டுக் கொலை செய்திருப்பேன் என்றும், யாழ்ப்பாணத்திற்குச் சீமான் வந்தால் சுட்டுக் கொல்வேன் என்றும் பேசியிருந்தார்.
இது குறித்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய சட்டத்தரணி உமாகரன் இராசையா, ஏற்கனவே காணிப் பிரச்சினை ஒன்றில் பெண்ணொருவரைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் அர்ச்சுனாவின் உத்தியோகபூர்வ துப்பாக்கி நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான நிலையில், சீமானைச் சுடுவேன் எனக் கூறுவதன் மூலம் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருப்பது அம்பலமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அர்ச்சுனாவின் இந்தப் பேச்சு, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஒரு பிழையான ஆயுத கலாசாரத்தை உருவாக்குவதாகவும், இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளைச் சிதைப்பதாகவும் சட்டத்தரணி கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தால் தமிழ்நாட்டில் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை நடத்தி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், சபாநாயகர் உடனடியாக சபை குறிப்பில் இருந்து இக் கருத்துக்களை நீக்கி, அர்ச்சுனாவை நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இவ்வாறானவர்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் எதிர்காலத்தில் விசா வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.




