எரியூட்டப்பட்ட அறிவுப் பொக்கிஷம்! யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம்!
தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையிலும், தமிழ் மக்களின் மனங்களில் அதன் சாம்பல் படிந்த வடுக்கள் இன்னமும் ஆறாத காயமாகவே இருந்து வருகின்றது.
கடந்த 1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர், அதாவது ஜூன் 1 ஆம் திகதி அதிகாலையில் அப்போதைய ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ ஆகியோர் தலைமையிலான பாதுகாப்புப் படையினரும் பேரினவாதக் கும்பலும் இணைந்து இந்த கொ*டூரத்தை நிகழ்த்தினர்.
உலகப் பிரசித்தி பெற்ற அறிஞர்களால் விதந்துரைக்கப்பட்ட ஆசியாவின் மிகச் சிறந்த இந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழின் மிக அரிய வரலாற்று ஆவணங்கள், பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள் மற்றும் மேற்கத்தைய அறிஞர்களின் அறிவுச் செல்வங்கள் எனச் சுமார் 97,000 அரிய வகை நூல்கள் முற்றாக எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.
ஒரு சமூகத்தை முற்றுமுழுதாக அழித்தொழிக்க, அதன் கல்வியையும் மரபுரிமை அடையாளங்களையும் சிதைக்க வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனையின் வெளிப்பாடே இந்த யாழ் நூலக எரிப்பாகும்.
இது குறித்துச் சர்வதேச எழுத்தாளர்கள் கூட, ‘தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் குரூரத்தைப் புரிந்துகொள்ள இந்த ஒரு சம்பவமே போதும்’ எனப் பிற்காலத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நூலக எரிப்புக்குப் பின்னரே ஈழ மண்ணில் விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்ததுடன், பிரதேசம் தோறும் மாவீரர் படிப்பகங்கள் உருவாக்கப்பட்டு வாசிப்புப் புரட்சி ஏற்பட்டது.





