பதின்ம வயது பிக்கு தொடர் பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் மற்றுமொரு தேரர்கள் திருவிளையாடல் அம்பலம்!
அம்பாறை, சுகந்தகம பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த 14 வயது இளம் பிக்குவை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 41 வயது பௌத்த தேரர் ஒருவர் மத்திய முகாம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) மாலை வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விகாரையில் தங்கியிருந்த ஐந்து இளம் பிக்குகளில் மூவர் அண்மையில் விகாரையை விட்டு வெளியேறியிருந்தனர். இதனையடுத்து பிரதேச மக்கள் விகாரையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த தயாரான நிலையில், சம்பவ விவரம் வெளிப்பட்டுள்ளது.
இதையடுத்து விகாரையில் மீதமிருந்த இரண்டு இளம் பிக்குகள் விசாரணைக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனை அறிந்த சந்தேக நபர் தீகவாவி பகுதிக்கு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார்.
பின்னர் மற்றொரு பௌத்த பிக்குவின் அறிவுறுத்தலின் பேரில், சந்தேக நபர் தீகவாவி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட 14 வயது இளம் பிக்கு வாக்குமூலம் அளித்ததுடன், மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 41 வயது தேரரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





