ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு : பதற்றத்தில் உலக நாடுகள்
அமெரிக்கா நடத்திய புதிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேசக் கடல் வணிகத்தின் முதன்மைப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை, எண்ணெய் டாங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் உள்ளிட்ட அனைத்துக் கப்பல்களுக்கும் மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை மீறி நுழையும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
எனினும், வணிகக் கப்பல்கள் தொடர்ந்து பயணித்து வருவதாகக் கூறி ஈரானின் அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளைகமான ‘செண்ட்காம்’ (CENTCOM) திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஆனால், அமெரிக்காவின் கூற்றை மறுத்துள்ள ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், ஹோர்முஸ் பகுதியில் ஈரானிய கடற்படைக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையே “நேரடி மோதல்” ஏற்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறிச் சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலைக் கண்டு அமெரிக்கப் படைகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் கூறினாலும், தங்களது போர்க்கப்பல்கள் எதுவும் தாக்கப்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக நிலவி வரும் போர்ச் சூழலால் இப்பாதை கடுமையான பாதிப்பைச் சந்தித்து வந்த நிலையில், தற்போதைய முழுமையான மூடல் அறிவிப்பு உலக நாடுகளைப் பெருத்த பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.





