ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி இன்று கொழும்பில் பாரிய முற்றுகைப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களை முற்றுகையிட்டும், காலிமுகத்திடலிலும், இன்று பெரியளவில் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இந்தப் போராட்டங்களில் பங்கேற்பதற்காக, சிலாபத்தில் இருந்து நேற்று முன்தினம் பேரணி ஒன்று புறப்பட்டு நேற்றிரவு வத்தளையை அடைந்துள்ளது.
இன்று காலை அந்தப் பேரணி, காலிமுகத்திடலை அடையும்.
அதேவேளை, களனிப் பல்கலைக்கழகத்தில் இருந்து நேற்று பிற்பகல் , அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேரணியாக காலிமுகத்திடலை வந்தடைந்துள்ளனர்.
நேற்று மாலை இந்தப் பேரணி இலங்கை வங்கி மாவத்தையை அடைந்த போது, காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு தடுக்க முயன்றனர்.
எனினும், பேரணி நேற்றிரவு காலிமுகத்திடல், கோட்டா கோ கம போராட்டக் களத்தை சென்றடைந்துள்ளது.
அத்துடன் பௌத்த பிக்குகள், அருட்தந்தையர், அருட்சகோதரிகள் இரவிரவாக போராட்டக் களத்தில், தங்கியிருந்து போராட்டக் காரர்களுக்கு கவசமாக இருந்தனர்.
இரவிரவாக போராட்டக் களத்தில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான கோசம் முழங்கிய நிலையில் இன்று காலை பெரும் போராட்டத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்றைய போராட்டத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள் பொதுமக்கள், மத தலைவர்கள் என அனைத்து தரப்புகளும் ஒன்றிணையவுள்ளன.