பெண்ணை மோதி தள்ளிவிடு தப்பியோடிய டிப்பர் வாகனம்
வவுனியா (Vavuniya) – கொறவப்பொத்தானை வீதியில் நேற்று (16.09.2025) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். வவுனியா தினச்சந்தை கட்டடத்திற்கு எதிரே, பாதசாரிகள் கடவை அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்த தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்தப் பெண் சாலையின் ஓரத்தில் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தார். அப்போது, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து கொறவப்பொத்தானை நோக்கி வேகமாக வந்த மஞ்சள் நிற டிப்பர் வாகனம் அவர் மீது மோதியது.
மோதிய வேகத்தில் அந்தப் பெண் மோட்டார் சைக்கிளிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். விபத்தை நேரில் கண்டவர்கள், விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





