தன்னை இயேசுவாகச் சித்தரித்து ட்ரம்ப் வெளியிட்ட புகைப்படம்
இயேசு போல் சித்தரித்து தனது சமூகவலைதள பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வத்திக்கானில் உரையாற்றிய 14ம் பாப்பரசர் லியோ, ஜனாதிபதி ட்ரம்ப்பை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்தார்.
“வலிமையைக் காட்டியது போதும், முட்டாள்தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வர வேண்டும்” எனக் கூறிய அவர், ஆயுதங்களைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட அழைப்பு விடுத்தார்.
இது வெள்ளை மாளிகைத் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாப்பரசரின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜனாதிபதி ட்ரம்ப் தன்னை இயேசு கிறிஸ்துவைப் போலச் சித்தரிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
“நான் பாப்பரசர் லியோவின் ரசிகன் அல்ல; அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர்” எனச் சாடிய ட்ரம்ப், போப் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
“நான் வெள்ளை மாளிகையில் இல்லாவிட்டால் பாப்பரசர் வத்திக்கானில் இருக்க முடியாது” எனத் தெரிவித்த அவர், பாப்பரசர் அரசியல்வாதியாக மாற முயற்சிப்பது கத்தோலிக்கத் தேவாலயங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.




